- நிஸ்தார் எஸ் ஆர் எம்
1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.
பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் - முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.
மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.
இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.
ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.
விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.
எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.
மர்ருபுர்ரத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.
சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.
இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.
இதற்கான பதில்
இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.
இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.
இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).
இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.
இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.
ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.
‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.
இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.
இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.
இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.
விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.
இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.
ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.
நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.
இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.
இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.
ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் - முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.
இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.
மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.
இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.
(தேசம் இதழ் 17 - 2004) & (தேசம் இதழ் 18- 2004 )
நன்றி: http://thesamnet.co.uk/?p=23382